கேரள வெள்ளம்...தர்மம் செய்த பிச்சைக்காரர் !

Home > தமிழ் news
By |
கேரள வெள்ளம்...தர்மம் செய்த பிச்சைக்காரர் !

கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை அந்த மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. 300-கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம்,நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி உயிர் இழந்தார்கள்.2000 கோடிக்கும் மேல் கடும் இழப்பை சந்தித்து இருக்கிறது கடவுளின் தேசம்.

 

வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியி ருந்தவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் தொடர்ந்து முகாமில் இருக்கின்றனர்.

 

இந்நிலையில் வெள்ள நிவாரண நிதிக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த 70 வயது முதியவர் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிம்ஜி பிரஜாபதி. வயது 70. நடக்க முடியாத இவர், கம்புகளை ஊன்றிக்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தார்.

 

நேராக ஆட்சித் தலைவரைச் சந்தித்தவர் தன்னிடம் இருந்த ரூ.5000 ரூபாயை அவரிடம் கொடுத்தார். பிறகு, இதை கேரள நிவாரண நிதிக்கு கொடுக்கிறேன், பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொடுத்தார். இதைக் கண்டு ஆட்சித் தலைவர் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம்.

 

ஏனென்றால் பிரஜாபதி, ஒரு பிச்சைக்காரர். அதோடு அவர் கேன்சருக்கும் சிகிச்சை எடுத்து வருகிறார். சீரியசான நிலையில் இருக்கும் அவர், உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நிவாரண உதவித் தொகை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற உதவிகள் செய்வது இவருக்கு புதிதல்ல.வசதியில்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திய பெண்குழந்தைகளுக்கு அவர்கள் படிப்பை தொடர்வதற்காக பல உதவிகள் செய்திருக்கிறார்.

 

தனக்கு போகதான் தானமும் தர்மமும் என்பார்கள் அனால் தனக்கு இல்லை என்ற போதும் தாமாக முன்வந்து உதவி செய்திருக்கும் இவர் நிச்சயம் மனிதருள் மாணிக்கம் தான்.