'நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்'.. பிக்பாஸ் வின்னர் ஓபன் டாக்!

Home > தமிழ் news
By |
'நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்'.. பிக்பாஸ் வின்னர் ஓபன் டாக்!

சமீபகாலமாக #MeToo ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்கள்  இதுதொடர்பான விவாதங்கள், விளக்கங்கள் என பரபரப்பாக காணப்படுகிறது.

 

குறிப்பாக சமூகத்தில் பிரபலமாகத் திகழும் நடிகைகளை பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள், துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

 

இதனால் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் விளக்கங்கள் ஆகியவை இந்தியளவில் பெரும் கவனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 

அந்தவகையில் பிக்பாஸ் வின்னரும், நடிகையுமான ரித்விகா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நமக்கு அளித்த Exclusive பேட்டியில் கூறும்போது ,''சிறுவயதில் அக்கம்-பக்கம் உள்ளவர்களால் எனக்கும் இதுபோல நிகழ்ந்துள்ளது. நிறைய பேர் இதுபற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். இனிமேல் இதனை மூடி வைக்க முடியாது.

 

வரலட்சுமி போன்றவர்கள் மிகவும் தைரியமாக இதுகுறித்து பேசுகிறார்கள். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து சொல்லி வளர்த்து விட்டோம் என்றால், அவர்களும் அம்மாவிடம் இதுபோன்ற நிகழ்வுகளை சொல்லி விடுவார்கள்.பயந்து கொண்டு மறைத்து வைக்காமல் இருந்தால், அந்த பிரச்சினை சீக்கிரமாக சரியாகி விடும்.

 

நான் எனது பெற்றோரிடம் சொல்லவில்லை. மறைத்து வைத்துவிட்டேன். நான் பெரிய பெண்ணாக ஆனபின்னர் தான் இது தவறு என எனக்குத் தெரிய வந்தது. அப்போது அம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டும் என தோன்றியது. அனைவரும் இதுகுறித்து ஓபனாக பேசினால் மிகவும் நல்லது,'' என தெரிவித்துள்ளார்.