அண்மைக் காலமாக கீகீ சேலஞ்ச் எனும் விநோதமான சேலஞ்ச் பிரபலமாகி வந்தது. ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து புகழ்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடும் ஆபத்தான இந்த சேலஞ்சை நிறைய பேர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த சேலஞ்சையே வயலில் உழுதுகொண்டிருந்த இரண்டு தமிழ் சகோதரர்கள் கிண்டலடித்த வீடியோவும் வைரலானது.  அதைத் தொடர்ந்து இதுபோன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காரியத்தை செய்தால் கடுமையான தண்டனை என்று அனைத்து மாநிலங்களிலும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

 

இந்நிலையில் ரயில் நிலையத்தில் கீகீ சேலஞ்ச்சை செய்த 3 இளைஞர்களை கைது செய்து தண்டனை விதித்துள்ளனர். மும்பையில் யூ-டியூப் சேனலை நடத்தி  வரும் இந்த 3 இளைஞர்கள் தங்களது சேனலுக்கு சிறப்பான வீடியோக்களை உருவாக்கி அவற்றை நிறைய பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பு உடையவர்கள்.

 

அந்த யோசனையில்  ஓடும் ரயிலில் இவர்கள் செய்த கீகீ சேலஞ்ச் வீடியோ இணையதளத்தில் பரவலானது. இந்த வீடியோவை பார்த்த போலீசார், ஓடும் ரயிலில் விதிகளை மீறி பயணம் செய்ததற்காகவும், ஆபத்தான இந்த கீகீ சேலஞ்சை முயற்சி செய்ததற்கும் கண்டித்து கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட  இந்த 3 இளைஞர்களையும் மும்பை ரயில்வே போலீசார், அங்குள்ள  மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றமோ, ஓடும் ரயிலில் கீகீ சேலஞ்ச் முயற்சித்த இந்த இளைஞர்களுக்கு புத்தி வர வேண்டும் என்று, அதே ரயில் நிலையத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது!

BY SIVA SANKAR | AUG 10, 2018 12:12 PM #KIKICHALLENGE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS