'உலகக் கோப்பையில் 4-வதா இறக்குவதுதான் சரி'.. காரணம் கூறும் முன்னாள் கேப்டன்!

Home > தமிழ் news
By |

நடக்கவிருக்கும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரரான விராட் கோலி 4 -வது இடத்தில் இறங்கலாம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் ஆஸ்திரேலியாவின் 71 ஆண்டுகால வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்தியா முறியடித்தது. மேலும் ஒருநாள் போட்டியையும் கைப்பற்றியது.

இதனையடுத்து நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நடந்துமுடிந்த 5 ஒருநாள் போட்டிகளில் 4-1 என்கிற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. மேலும் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி களமிறங்கும் இடம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கவாஸ்கர் பேசியதாவது, ‘உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்க இருப்பதால், இதற்கு முன் அங்கு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் இறுதி போட்டியை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. மேலும் ரோகித் ஷர்மாவை பாகிஸ்தானின் முகமது அமீர் உடனே அவுட் ஆக்கி வெளியேற்றினார். கோலி களமிறங்கிய போதுகூட பந்து ஸ்விங் ஆகி வருவது குறையவே இல்லை' என கூறினார்.

மேலும் கூறிய அவர்,‘இதனை உணர்ந்து விராட் கோலி போன்ற முக்கியமான வீரரை நான்காவதாக களம் இறக்குவதே சிறந்தது’ என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் கோலி களமிறங்குவது பற்றி கருத்து கூறியுள்ளார்.

TEAMINDIA, VIRATKOHL, ICC, BCCI, WORLDCUP2019

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS