விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மனந்திறந்து பேசியிருக்கிறார்.

 

2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மன் நாட்டுக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள புயுசிரியஸ் சம்மர் ஸ்கூலில் உள்ள மாணவர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

 

வன்முறையை வெல்வதற்கு ஒரேவழி மன்னிப்பு மட்டுமே, அதன் மூலம் மட்டுமே நாம் வன்முறையைக் கடந்து வரமுடியும். என் தந்தை 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதற்குக் காரணமான நபர் கடந்த 2009-ம் ஆண்டு சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்தேன்.

 

ஆனால் எனது மனதில் மகிழ்ச்சி ஏற்படவில்லை. உடனே எனது சகோதரி பிரியங்காவை போனில் அழைத்து இதைத் தெரிவித்தேன். எனது சகோதரியும் ஆமாம் எனது மனதிலும் மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றார்.

 

எனது மனதில் மகிழ்ச்சி ஏற்படாததற்குக் காரணம் பிரபாகரனின் குழந்தைகள் இடத்தில் நான் என்னை வைத்துப் பார்த்தது தான். எனது தந்தையை இழந்து நான் கதறியது போன்று தான் அந்தக் குழந்தைகளும் கதறும் என உணர்ந்தேன்.

 

என்னைப் பொருத்தவரை வன்முறையை எதிர்த்து போரிட அஹிம்சையால்மட்டுமே முடியும். வேறு எந்த வழியும் இல்லை. வன்முறைக்குள் இருந்து கொண்டு வன்முறையை எதிர்த்து வன்முறை ஆயுதத்தால் போரிடலாம் வெற்றிபெறலாம். ஆனால், மீண்டும் அந்த வன்முறை வளரக்கூடும்.

 

மனதுக்குள் இருக்கும் நீங்காத  கோபத்தின் வெளிப்பாடுதான் வன்முறைக்குக் காரணம். நீங்கள் அதற்கான காரணத்தை புரிந்துகொண்டு, அந்த வன்முறையை, கோபத்தை வெளியேற்றாதவரை அது தொடர்ந்து உங்கள் மனதில்தான் இருக்கும். உங்களால் வன்முறையை விட்டு வெளியே வர முடியாது. வன்முறையை எதிர்த்து அதிகமான வன்முறையால் போரிட்டுக்கொண்டே இருக்க முடியாது.

 

இவ்வாறு அவர் பேசினார்.

BY MANJULA | AUG 23, 2018 3:35 PM #RAHULGANDHI #CONGRESS #PRABHAKARAN #LTTE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS