பெங்களூருவின் மத்திய கார் உதிரி பாகங்களின் கிடங்கில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியை ஓட்டிவந்த  நெல்லையைச் சேர்ந்த அருள்மணி, காஞ்சிபுரம் மாவர்ரம் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள வெள்ளைச் சத்திரத்தில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது காரில் வந்த சிலர் உடனே அருள்மணியை கடத்தி தங்கள் காருக்குள் போட்டுக்கொண்டு கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் குன்றத்தூர் அருகே சென்றதும் அவரை கீழே தள்ளிவிட்டு காரில் சென்றவர்கள் கண்டெய்னரை கடத்திச் சென்றுள்ளனர்.

 

பின்னர் சுங்குவார்சத்திரத்தில் அருள்மணி அளித்த புகாரின்பேரில், கடத்தப்பட்ட லாரியின் ஜி.பி.எஸ்-ஐ வைத்து, லொகேஷனை கண்டுபிடித்து, ஆந்திரா சென்று மடக்கிப் பிடித்தனர். ஆனால் அந்த லாரி கடத்தப்பட்ட லாரி என்பதை அறிந்து போலீசார் அதிர்ந்தே போயினர். ஏன் என்றால் அது காரின் உதிரி பாகங்களை ஏற்றி வந்த  (கடத்தப்பட்ட) லாரி அல்ல.  உண்மையில் கடத்தப்பட்ட லாரியில் இருந்த ஜி.பி.எஸ்-ஐ வேறு ஒரு லாரியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் அந்த நூதன கடத்தல் காரர்கள்.  அந்த வேறு ஒரு லாரியைத்தான் போலீஸ் ஆந்திரா வரை சென்று மடக்கி பிடித்தனர்.

 

எனினும் கடத்தல் காரர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விசாரணையை தீவிரப்படுத்தி, ஒருவழியாக கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி மாதவரம் கிடங்குக்குள் இருந்ததாக கிடைத்த தகவல்களை அடுத்து அங்கு சென்று லாரியை மீட்டெடுத்து, கடத்தல் சம்பவத்தை நூதன முறையில் நிகழ்த்திய முகேஷ், அலாவுதீன், சதாசிவம், சிவக்குமார் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். சினிமாக் காரர்களையே மிரட்டும் திரைக்கதையை போல நிகழ்ந்த இந்த கடத்தல் சம்பவமும், அதனை கண்டுபிடித்த காவல்துறையினரின் விசாரணை முறையும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

BY SIVA SANKAR | SEP 12, 2018 5:43 PM #ROBBERY #CRIME #INVESTIGATION #POLICE #ABDUCTION #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS